ஜும்ஆ குத்பா மஸ்ஜிதுந் நபவி 29 ஜுன் 2012 09 ஷஃபான் 1433 ஹி.

29 ஜுன் 2012 09 ஷஃபான் 1433 ஹி அன்று மஸ்ஜிதுந் நபவீயில் நடைபெற்ற ஜும்ஆ குத்பா வின் கருத்துகளின் சாராம்சம்.

கதீப் : இமாம் ஹுஸைன் அப்துல் அஸீஸ் ஆலுஷ்ஷைய்க்

தலைப்பு: மென்மையின் பால் ஆர்வமூட்டல்

-----------------------------------------------------------------------

இந்த குத்பாவில் இமாம் “இஸ்லாத்தில் மென்மையின் முக்கியத்துவம் ,அதன் சிறப்பு பற்றி கூறி பொதுவாக முஸ்லிம்கள் அனைவரும் அவர்களுக்கு மத்தியில் இரக்கமாக , மென்மையாக நடந்து கொள்ள வேண்டும்  என உபதேசம் செய்தார்கள். குறிப்பாக தலைவர்கள், ஆட்சியாளர்கள்  மற்றும் அமைச்சர்கள் அவர்களது நிர்வாகத்தில் இருப்பவர்களுடன் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும். கெடுதி செய்தல் , கெட்ட பண்புகளை விட்டும் முற்றாகத் தவிர்ந்து கொள்ளவேண்டும்” என கூறினார்கள்.



இதுபற்றி அல்குர்ஆனில் கூறப்படுவதாவது..

·         (நபியே)அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (இரக்கமுள்ளவராக) நடந்து கொள்கிறீர்; மேலும்,சொல்லில் கடுகடுப்பானவராக இரக்கமற்ற இதயமுள்ளவராக நீர் இருந்திருப்பீரானால்,  உம்மிடமிருந்து அவர்கள் பிரிந்து சென்றிருப்பார்கள்; ஆகவே அவர்(களின் பிழை)களை நீர் மன்னித்து (அல்லாஹ்விடம்) அவர்களுக்காக மன்னிக்கக் கோருவீராக; மேலும்(யுத்தம் , சமாதானம் முதலிய மற்ற) காரியத்தில்) அவர்களுடன் கலந்தாலோசனை செய்வீராக… ஆலஇம்ரான் - 159.





 மென்மை என்பது இரக்கம்,கவனிப்பு,புன்முறுவல்,மன்னித்தல் போன்ற பல சிறப்பு பண்புகளை உள்ளடக்கியது. இது சொல்லிலும் செயலிலும் நிகழுக்கூடிய  அனைத்துவிதமான  தீயபண்புகளையும் தவிர்க்கச்செய்யும்.

இதுபற்றி அல்குர்ஆனில் கூறப்படுவதாவது..

·         இன்னும் நீர் விசுவாசிகளுக்கு (பணிவெனும்) இறக்கையைத் தாழ்த்துவீராக.-அல்ஹிஜ்ர்-88

·         இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் எத்தகையோரெனில், அவர்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள்.மூடர்கள் அவர்களுடன் (வேண்டாதவற்றைப்) பேசமுற்பட்டால் ஸலாமுன் (சாந்தி உண்டாகட்டும்) என்று கூறி (அவர்களைவிட்டு விலகி)  விடுவார்கள். அல்புர்கான் - 63



மென்மை என்பது கல்நெஞ்சம் உள்ளவர்களைக்கூட துரிதமாக மாற்றும் திறனுடையது. மேலும் நன்மைகளை பன்மடங்காகவும் அந்தஸ்த்துக்கள் உயர்வு பெறவும் இது ஒரு காரணியாகும்.

இதுபற்றி நபியவர்கள் கூறுகிறார்கள்   

·         நிச்சயமாக அல்லாஹ் மென்மையானவன். மென்மையை நேசிக்கக்கூடியவன். இதற்குரிய நன்மையை வேறு எந்த செயலுக்கும் வழங்காத அளவுக்கு அதிகமான நன்மையை வழங்குகிறான்.



மென்மை என்பது அல்லாஹ்வுடைய அன்பை, நேசத்தை அடைந்து கொள்வதற்க்கான ஒரு காரணியாகும்.

·         நிச்சயமாக அல்லாஹ் மென்மையானவன்.மேலும் அனைத்துக்காரியங்களிலும் மென்மையை விரும்பக்கூடியவன்  புகாரி,முஸ்லிம்.



இந்த பண்பு இல்லாமல் போகும்போது பல நன்மைகளை இழக்க நேரிடும்.

·         மென்மையை தடுப்பவர்கள் அனைத்து நன்மைகளிலிருந்தும் தடுக்கப்படுவர். நபி மொழி -முஸ்லிம்.

·         நபியவர்களிடம் சுவரக்கத்தில் அதிகமாக மனிதர்களை நுழைக்கக்கூடியது எது என்று கேட்க்கப்பட்டபோது  அதற்கு நபியவர்கள் தக்வாவு (இறையச்சமு)ம் நற்பண்புகளுமாகும். என்றார்கள்- திர்மிதி



மேலும் கெட்ட பண்புகள்  அனைத்தையும் தவிர்ந்து கொள்ளவேண்டும் எனவும் இமாம் உபதேசித்தார்கள்.

·         மென்மையை உங்களுக்குப் போதிக்கிறேன் .தீயசெயலையும்,மூர்க்கத்தனத்தையும் எச்சரிக்கிறேன். நபிமொழி புகாரி

0 comments:

Post a Comment

 
Top