அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால் ...
நாள் – 05 முஹர்ரம் 1435 ஹி – 08 நவம்பர் 2013
தலைப்பு :- அல்குர்ஆன் மற்றும் நபிமொழியில் வரும் சுபசெய்திகள்.
இமாம் :- அப்துல் பாரீ அல் துபைதீ
இடம் :- மஸ்ஜிதுந்நபவி மதீனா முனவ்வரா.
இமாமவர்கள் அல்குர்ஆன் மற்றும் நபிமொழியில் வரும் சுபசெய்திகள் எனும் தலைப்பில் சுபசெய்திகள் பற்றியும், நன்மையைக்கொண்டு சுபசெய்திகள் கூறுவதின் சிறப்புக்களையும் எடுத்துக்கூறினார்கள். மேலும் அல்குர்ஆன் மற்றும் நபிமொழியில் ஈருலகிலும் கிடைக்கக்கூடிய சுபசெய்திகளை பற்றி வரக்கூடிய பல ஆதாரங்களையும் கூறினார்கள்.

முதலில் அல்லாஹ்வைப் புகழ்ந்து நபியின் மீது ஸலவாத்தும் ஸலாமும் கூறியவர்களாக மக்களனைவருக்கும் தக்வா எனும் இறையச்சத்தை வஸிய்யத் எனும் உபதேசமாகக் கூறினார்கள்.
·         3:102. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்.
சுபசெய்தி, நற்செய்தி, நன்மாராயம் போன்ற வார்தைகள் நம்பிக்கையூட்டுவதுடன் உற்சாகமுமூட்டி, விரக்தி மற்றும் கவலைகளுக்கு மருந்தாகவும் அமைகின்றது. மேலும் அல்லாஹ்வால் வாக்களிக்கப்பட்டவைகளின் மீது உறுதியை ஏற்படுத்தி, கவலை மற்றும் துயரங்களை நீக்கி விடும்.
பொதுவாக சுப செய்தி என்ற வாசகம் நன்மைகளையே குறிக்கும். அதற்கு மாற்றமாக இருப்பின் காரணத்துடனே அமையப்பெறும். சுப செய்திகள் பல அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.  
 அல்குர்ஆன் அனைத்துக்கும் விளக்கமாக அல்லாஹ்வால் இறக்கப்பட்டதாகும்.
·         இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம்.
·         17:9. நிச்சயமாக இந்த குர்ஆன் முற்றிலும் நேராக இருக்கும் நல் வழியைக் காட்டுகிறது; அன்றியும் நற்கருமங்கள் செய்து வரும் முஃமின்களுக்கு, நிச்சயமாக மிகப் பெரும் நற்கூலியுண்டு என்றும் நன்மாராயங் கூறுகிறது.

அல்குர்ஆன் வசனங்கள் இறைவிசுவாசிகளின் உள்ளத்தில் அமைதியை ஏற்படுத்துகின்றது.
·         வானவர் ஜிப்ரஈல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபியவர்களிடம் வருகை தந்து ( இது வானத்திலுள்ள ஒரு வாயிலாகும் இன்றுதான் இரு திறக்கப்படுகின்றது. அதனூடாக ஒரு வானவர் இறங்கினார். அவர் இன்றுதான் முதற்தடவையாக இப்புவியில் இறங்கி நபியவர்களுக்கு ஸலாம் எனும் முகமன் கூறி உங்களுக்கு முன் எந்த நபிக்கும் கொடுக்கப்படாத இரண்டு ஒளிகளைக் கொண்டு உங்களுக்கு நன்மாராயம் கூறுகின்றேன். அவைதான் ஸுரதுல் பாதிஹாவும் ஸுரதுல் பகராவின் இறுதி வசனங்களுமாகும். இவைகள் ஓதுவதன் மூலம் கேட்டதைப் பெற்றுக்கொள்வீர்கள் என்றார்.) எனக்கூறினார்கள். நூல் முஸ்லிம்.
நபியவர்கள் எச்சரிக்கை செய்து நன்மாராயம் கூறக்கூடியவராகும்.
·         25:56. இன்னும் (நபியே!) நாம் உம்மை நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அல்லாமல் அனுப்பவில்லை.
நபியவர்கள் நன்மாராயம் கூறுவதின் பால் அழைப்பார்கள். வெறுக்கக்கூடியவைகளைத் தடுப்பார்கள். மேலும் அவர்கள் சுபசெய்திகளைக் கூறுங்கள். வெறுப்படையச்செய்யவேண்டாம். இலகுபடுத்துங்கள் கஷ்டப்படுத்தவேண்டாம் என்பார்கள்.
மேலும் அவர்களுடைய தோழர்களுக்கு ((சுபசெய்திகளைக் கூறுங்கள் வெறுப்படையச்செய்யவேண்டாம். இலகுபடுத்துங்கள் கஷ்டப்படுத்தவேண்டாம் என்பதில்பால் மனிதர்களுக்கு அழைப்புவிடுங்கள் என )) கட்டளையிட்டார்கள்.
சுபசெய்திகளைக்கூறுவதிலும், பயமுறுத்துவதிலும் சமநிலையாக இருப்பது இறைத்தூதர்களின் வழிகாட்டலாகும். அல்லாஹ்விடம் அவனது அருளை ஆதரவு வைப்பதுடன், அவனது தண்டனைகளைப் பயப்படுவதுமானது  இதுவே நடுநிலையானபோக்காகும்.
நற்செய்திகளைக் கேட்பது வழிப்படுவதின் பால் ஆற்றலையும் முயற்சியையும் அதிகரிக்கச்செய்யும்.
நன்மாராயம் கூறுவது என்பது ஒரு தார்மீக ஆதரவாகும். 
·         நபியவர்களது மனைவி கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் தனது கணவன் நபியவர்களுக்கு கூறும்போது '' சுபசெய்தியைக் கூறுகின்றேன் அல்லாஹ்வின் மீது ஆணையாக அல்லாஹ் உங்களை ஒரு போதும் அவமானப்படுத்தமாட்டான். ''
கணவன் மற்றும் மனைவி , படைத்தலைவன் மற்றும் போர்வீரர்கள் மேலும் தலைவர் மற்றும் சமுகம் இவர்களுக்கு மத்தியில் நற்செய்திகளை ஒருவருக்கொருவர் கேட்கச்செய்வது என்பது கவலை மற்றும் பயம் போன்ற நேரங்களில் நன்மாரயங்களைக் கொண்டுவரும்.
நன்மாரயங்களைக் கொண்டுவரக்கூடிய செயல்களும் பிரதிபலனும்....
அல்லாஹ்வுக்கு வழிப்படுவதின் பால் முன்னேறுவது சுபசெய்திகளைக் கொண்டுவரும்
·         39:17. எவர்கள் ஷைத்தான்களை வணங்குவதைத் தவிர்த்துக் கொண்டு, அவற்றிலிருந்து விலகி முற்றிலும் அல்லாஹ்வின் பால் முன்னோக்கியிருக்கிறார்களோ. அவர்களுக்குத் தான் நன்மாராயம்; ஆகவே (என்னுடைய) நல்லடியார்களுக்கு நன்மாராயங் கூறுவீராக!
இறைபக்தியுடையவர்களுக்கான நன்மாராயம் வெற்றியாகும்.
·         10:63. அவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள்.
·         10:64. அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நன்மாராயமுண்டு; அல்லாஹ்வின் வாக்கு(றுதி)களில் எவ்வித மாற்றமுமில்லை - இதுவே மகத்தான பெரும் வெற்றி ஆகும்.
முஜாஹித் எனும் போராளிகளுக்கான நன்மாராயம் செழுமையும், இறைபொருத்தமுமாகும்.
·         9:20. எவர்கள் ஈமான் கொண்டு, தம் நாட்டை விட்டும் வெளியேறித் தம் செல்வங்களையும் உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தார்களோ, அவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மகத்தானவர்கள் மேலும் அவர்கள்தாம் வெற்றியாளர்கள்.
·         9:21. அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் தன்னுடைய கிருபையையும், திருப்பொருத்தத்தையும் (அளித்து) சுவனபதிகளையும் (தருவதாக) நன்மாராயம் கூறுகிறான்; அங்கு அவர்களுக்கு நிரந்தரமான பாக்கியங்களுண்டு.
பொறுமையாளர்களுக்கான நன்மாராயம்....
·         2:155.  பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
·         2:156. (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள்.
·         2:157. இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன. இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.
அல்லாஹ்வின் இல்லமாம் பள்ளிவாயில்களுக்கு நடந்து செல்லக்கூடியவர்களுக்கான நன்மாராயம்....
·         ((இரவு வேளையில் பள்ளிவாயிலுக்கு நடந்து செல்பவர்களுக்கு மறுமை நாளில் பூரண ஒளி கிடைக்குமென நன்மாராயம் கூறுங்கள்.)) நபிமொழி
நோயின் மூலம் சோதிக்கப்பட்டவர்களுக்கான நன்மாராயம்....
·         (( நன்மாராயம் கூறுங்கள் ! நிச்சயமாக அல்லாஹ் கூறுகின்றான் நோய் எனது நெருப்பில் உள்ளதாகும். இதன்மூலம் எனது முஃமினான அடியானை உலகில் சோதிக்கின்றேன். இது மறுமையில் நரக நெருப்பை விட்டும் பாதுகாக்கக்கூடிய ஒரு பங்கை வகிக்கும்.
அம்மார் இப்னு யாஸிர் ரழியள்ளாஹு அன்ஹு அவர்களுக்கு நன்மாராயமாக உன்னை ஒரு அநியாய கூட்டம் கொலை செய்யுமென நபியவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வுடைய இறைநேசர்களுக்கு ஈருலகிலும் நன்மாராயம்...
·         10:62. (முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேயர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
·         10:63. அவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள்.
·         10:64. அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நன்மாராயமுண்டு; அல்லாஹ்வின் வாக்கு(றுதி)களில் எவ்வித மாற்றமுமில்லை - இதுவே மகத்தான பெரும் வெற்றி ஆகும்.
ஒரு முஃமின் எனும் இறைவிசுவாசிக்கு கிடைக்கக்கூடிய அவசர நன்மாராயமாவன....
அவன் இரகசியமாக செய்த நற்செயல்கள் பற்றி
·         அபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிரார்கள்         (நபியவர்களிடம் ஒரு மனிதன்; இரகசியமாக செய்யும் நற்செயல்கள் பற்றி மனிதர்களால் புகழப்படுவது பற்றி விசாரிக்;கப்பட்ட போது ...) நபியவர்கள் ( அதுதான் முஃமினான இறைவிசுவாசிக்குக் கிடைக்கக்கூடிய அவசர நன்மாராயமாகும் ) எனக்கூறினார்கள்.
நல்ல கனவுகளும் நன்மாரயங்களிலுள்ளவையே ....
·         ((நுபுவ்வத் நபித்துவத்தில் நன்மாராயங்களைத்தவிர வேறெதுவும் எஞ்சியில்லை''அப்பொழுது நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரவர்ளே ! அது என்ன நன்மாராயங்கள் என வினவியபோது அதுதான் நல்ல கனவு எனப்பதிலளித்தார்கள்.))நபிமொழி–புகாரி முஸ்லிம்.
குழந்தைகளைக் கொண்டு நன்மாராயம் வேண்டுவதும் நன்மாராயம் சொல்வதும் மாரக்கம் அனுமதித்துள்ள வழிமுறைகளாகும்.
·         42:49. அல்லாஹ்வுக்கே வானங்களுடையவும் பூமியுடையவும் ஆட்சி சொந்தமாகும்; ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான்; தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான்; மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான்.
·         42:50. அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான்; அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கிறான் – நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன்; பேராற்றலுடையவன்.
பெண் குழந்தைகளின் மூலம் வெறுப்படைந்து அதனை சிரமமாக எடுத்துக்கொள்பவர்களை அல்லாஹ் கேவலப்படுத்துகின்றான்.
·         16:58. அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது - அவன் கோபமுடையவனாகிறான்.
·         16:59. எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் - அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்); அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா?
வீசும் காற்றும் ஒரு நன்மாராயமே !
·         30:46. இன்னும் நீங்கள் அவன் ரஹ்மத்திலிருந்து சுவைப்பதற்காகவும், கப்பல் தன் உத்தரவினால் (கடலில்) செல்வதற்காகவும், தன் அருளை நீங்கள் தேடிக் கொள்வதற்காகவும். நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் (இவற்றுக்கெல்லாமாக) நன்மாராயங் கூறிக்கொண்டு வருபவையாகக் காற்றுகளை அனுப்புகிறானே அதுவும் அவன் அத்தாட்சிகளிலுள்ளதாகும்.
அல்லாஹ்வுடைய தூய்மையான இறைநேசர்களுக்கான அடையாளங்களில் உள்ளவையாவன....
அல்லாஹ் அவர்களுக்கு நன்மையை நாடுவான் மற்றும் அவர் பார்க்கக்கூடியவைகளில் அல்லாஹ் சிரமங்களை நீக்கி மென்மையையும் இலகுத்தன்மையையும் ஏற்படுத்துகின்றான்.
·         92:5. எனவே எவர் (தானதருமம்) கொடுத்து. (தன் இறைவனிடம்) பயபக்தியுடன் நடந்து.
·         92:6. நல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மையாக்குகின்றாரோ,
·         92:7. அவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை) இலேசாக்குவோம்.
·         65:4. எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான்.
எவர் தனது தனது கருமங்கள் மற்றும் காரியங்கள் இலகுவாக்கப்பட்டதாக காண்கின்றாரோ அல்லாஹ் அவருக்கு நன்மையை நாடியிருக்கின்றார் என்பதை உணர்ந்துகொள்ளட்டும். இது தான் சந்தேகத்திற்கிடமற்ற நன்மாராயமாகும்.
சிரமங்கள் விடுதலைக்கான நன்மாராயமாகும்
·         2:214 அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; 'அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்' என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; 'நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது' (என்று நாம் ஆறுதல் கூறினோம்.)
மரண வேளையில் மற்றும் குளிப்பாட்டும் போது மற்றும் கபனிடும் போதும் உயிர் கைப்பற்றப்படும் போதும் முஃமிகளுக்கு சில நன்மாராயங்கள் வெளிப்படுத்தப்படும்.
·         89:27. (ஆனால். அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே!
·         89:28. நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும். (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக.
·         89:29. நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக.
·         89:30. மேலும். நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்).
தவ்பா எனும் பாவமன்னிப்பை வேண்டுதல்
·         9:117. நிச்சயமாக அல்லாஹ் நபியையும் கஷ்ட காலத்தில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்களையும், அன்ஸாரிகளையும் மன்னித்தான் அவர்களில் ஒரு பிரிவினருடைய நெஞ்சங்கள் தடுமாறத் துவங்கிய பின்னர். அவர்களை மன்னித்(து அருள் புரிந்)தான் - நிச்சயமாக அவன் அவர்கள் மீது மிக்க கருணையும். கிருபையும் உடையவனாக இருக்கின்றான்.
மேலும் சில நன்மாராயங்களாவன.....
சிறிய செயல்களுக்கு அதிகமான கூலிகள்.........
·         ஆஷுரா நோன்பு ( முஹர்ரம் மாதம் 10 ஆம் நாள்)(( இது சென்ற ஒரு வருட பாவத்திற்கான பரிகாரமாகும்.)) நபிமொழி  முஸ்லிம்.

அனைத்து நன்மாராயங்களையும் பெற்ற நல்லடியார்களாக எம்மனைவரையும் ஆக்கிவைப்பானாக !!!! ஆமீன்.

0 comments:

Post a Comment

 
Top