24 துல்ஹஜ் 1433 ஹி (அ) 09 நவம்பர் 2012 அன்று  கூறப்பட்ட சில முக்கிய கருத்துக்கள்…..
இடம் : மஸ்ஜிதுந்நபவி  மதீனா முனவ்வரா
தலைப்பு : ஹாஜிகளுக்கான அறிவுரைகள்.! 
இமாம் :  அப்துல் பாரீ அல்துபைதி.            
இமாம் அவர்கள் ஹாஜிகளுக்கான அறிவுரைகள் எனும் தலைப்பில் அனைவருக்குமான பொதுவான சில அறிவுரைகளையும், உபதேசங்களையும் செய்துவிட்டு குறிப்பாக ஹாஜிகளுக்கான அறிவுரைகளை கூறினார்கள். அல்லாஹ்வின் விருந்தாளிகளான ஹாஜிகள் ஹஜ்ஜுக்குப் பின்னர் தொடர்ந்து அல்லாஹ்வுக்கு முழுமையாக வழிப்படுவதோடு பாவங்களையும், தவறானவைகள் அனைத்தையும் தவிர்ந்துகொள்ள வேண்டும். மேலும் நன்மைகள் செய்வதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போதெல்லாம் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்கள். மேலும் வேற்றுமை, பிரிவினையை எச்சரிக்கை செய்ததுடன் சென்றகால எமது சமுகம் தலைமை தாங்கியது போன்று சமகாலத்தில் இஸ்லாமிய மார்க்கத்தை அதன்தூய வடிவுடன் உலகம் முழுவதும் பரப்புவதோடு, முறையான சரியான இஸ்லாமிய வழிகாட்டலை நடைமுறையில் பின்பற்றி தலைமை தாங்க முன்வர வேண்டும் என உபதேசித்தார்கள். 

o    3:102. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்.
ஹாஜிமார்களே ! உங்களுக்கு சேவைகள் செய்வதன் மூலம் இந்த நாடு பெருமையடைகின்றது, சிறப்படைகின்றது. எத்தனை கண்கள் கண்விழித்திருந்தன.? எத்தனை ஏற்பாடுகள்…? எவ்வளவு பணம் செலவு செய்யப்படுகிறது ! . தியாக மனப்பான்மையுடன் செய்த அவர்களது தியாகங்களை அல்லாஹ் ஏற்று அவர்களுக்கு அருள் புரியுமாறும், அதிகமான நன்மைகளைப் பதிவு செய்யுமாறும் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக  !!!
நாட்கள் கடந்து செல்லும்போதெல்லாம் முஸ்லிம் அவனது வாழ்க்கையை மீள்பார்வை செய்து நினைவூட்டுவது பயனுள்ள விடயமாகும்.
o    51:55. மேலும் நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில் நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்.
எனக்கும் உங்களுக்குமான பொதுவான உபதேசத்தை நினைவூட்டுகிறேன்.
இஸ்லாம் ஒரு பாதுகாப்பான கோட்டையாகும். ஈமான் எனும் இறைவிசுவாசம் வலுவான ஒரு கவசமாகும். கௌரவம், மகிமை என்பது இப்புனித மார்க்கத்திலாகும்.
o    ((உமர் இப்னு கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் - நாங்கள் மிகவும் கீழ் தரமான நிலையிலிருந்தோம். இஸ்லாமிய மார்க்கத்தின் மூலம் அல்லாஹ் எங்களை சங்கைப்படுத்தினான். இஸ்லாம் அல்லாதவைகள் மூலம் சங்கையைத் தேடும்போதெல்லாம்  எங்களை கேவலப்படுத்தினான்.))
இஸ்லாம் எனும் அருளைத் தந்து பைதுல் ஹராம் எனும் புனித வீட்டை தரிசிக்கச் செய்ய சந்தர்ப்பம் வழங்கி நம்மை அன்பு கொண்ட அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவோம்.
அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த தவறும்போது அருளை இழக்க நேரிடும்.
நன்றி செலுத்தும் வகைகளில் மிகவும் உயர்வான நிலை அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் வழிப்பட்டு நல் அமல்களைச் செய்து முழுமையாக வழிபடுவதற்கு முயற்சிப்பதாகும்.
இறைவிசுவாசியின் ஆத்மா நற்கூலிகளைப் பெற்றுக்கொள்ளும் வரை அமைதி பெறாது.

ஈமான் எனும் இறைவிசுவாசத்தை அதிகப்படுத்துவதற்கான வழிமுறைகளில் சில,,,

o    மார்க்க அறிவியல் வகுப்புக்களிலும் மார்க்க அறிஞர்களின் ஒன்று கூடல்களிலும் கலந்து கொள்ளல்.
o    நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்.
o    நோயாளியை நோய் விசாரிக்கச் செல்லல்.
o    சுமூக ஒற்றுமையை ஏற்படுத்தும் சமாதானம் செய்து வைத்தல் போன்றவைகளில் ஈடுபடல்.
o    தீங்கு விளைவிக்கக் கூடியவைகளை அப்புறப்படுத்தல்.
      o    ஜனாஸாக் (மரண இறுதிச்சடங்கு)களில் கலந்துகொள்ளல்.

o    பொதுவாக நன்மைகளை அடைந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அதனை தவறவிடாமல் முழு முயற்சியுடன்  பயன்படுத்திக்கொள்ளல் .

கிடைக்கும் சந்தர்பத்தை பயன்படுத்தாமல் விடுவது பெறும் இழப்பாகும்.

-----------------------------------
o    ((எவர் கெட்டவார்தைகள், கெட்டசெயல்களைத் தவிர்த்து ஹஜ் செய்து வருகிறாரோ அவர் அன்று பிறந்த பாலகனைப் போன்றாவார்))
o    அரபாவுடைய தினத்தில் நோன்பு நோற்பது (( சென்றுபோன மற்றும் வரவுள்ள வருடங்களின் பாவங்களை அது அழித்துவிடும்.)) நபிமொழி
பாவங்கள் மன்னிக்கப்பட்டு ஏடுகள் தூய்மையான நிலையில் இருக்கக்கூடிய நிலையில் உள்ள நீங்கள் தொடரந்தும் வெண்மையானதாகவே இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.
பாவங்களை விட்டு முற்று முழுதாக தவிர்ந்து கொள்ளுங்கள்.
o    13:11. எந்த ஒரு சமூதாயத்தவரும் தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில் அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை; இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத் தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத் தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.

புத்தியுள்ள ஒவ்வொருவரும்  தனது ரப்பை நினைவு கூர்ந்து தன்னைத் தானே மீள்பார்வை செய்து, அல்லாஹ்வின் தண்டனைகளைப் பயந்து , அல்லாஹ்வின் இல்லமாம் மஸ்ஜித்களில் ஐவேளைத்தொழுகைகளை  இமாம் ஜமாஅத்துடன் நிறைவேற்றி அல்குர்ஆனையும் ஓதிவரவும்.
------------------
       நேர்வழிபெற்றவர்களின் அடையாளங்களில் ஒன்று  மனோ இச்சைகளை வெறுக்கச் செய்யும் பொறுட்டும், தடுக்கப்பட்ட ஆசைகளை தவிர்ந்து கொள்வதற்காகவும் தனது ஆத்மாவுடன் போர்செய்வதாகும்.

தடைசெய்யப்பட்டவைகளை தவிர்ந்து பயிற்சி எடுத்தால் அனைத்து விதமான தடைகளையும் தவிர்ந்து கொள்வதற்கான சக்தியை அவர் பெற்றுக்கொள்வார்.
இந்தக்காலத்தில் ஆசைகள் சந்தேகங்கள் பல வகைகளாக உள்ளது.  எனவே ஒரு முஃமினை (இறைவிசுவாசியை)ப் பொருத்தவரையில் அவனது கோட்பாடு, நம்பிக்கை, நடத்தை, விதிபற்றிய நம்பிக்கை, உடல் சக்தி, சிந்தனை, எழுதுகோல், அறிவியல், பொருளாதாரம், கைத்தொழில் போன்ற அனைத்து விடயங்களிலும் சக்தியுள்ளவனாக வலுவுள்ளவனாக இருக்கவேண்டும்.
o    (( சக்தியுள்ள முஃமின் சக்தியற்ற முஃமினைவிட அல்லாஹ்விடத்தில் சிறந்தவனாகவும் அன்புக்குரியவனாகவும் உள்ளான். அனைவரிலும் சிறப்பு இருக்கறது.)) நபிமொழி முஸ்லிம்.

----------------------------

      மஸ்ஜிதுந்நபவி, மஸ்ஜிதுல் ஹராம் ஆகிய இரு பள்ளியின் சூழலில் வியக்கத் தக்கதான காட்சிகளை ஒவ்வொரு ஹஜ்காலங்களிலும் காணலாம். உடல்கள் அன்மித்து, உள்ளங்கள் ஒற்றுமைப்பட்டு, உணர்வுகள் ஒன்றுபட்டு, வணக்கங்கள் ஒரே முறையாக நிறைவேற்றப்படக் கூடிய காட்சிகள் ஒன்றுபட்ட கிளைகளைப் போன்று ஒற்றுமையை  வெளிப்படுத்துகிறது.
o    8:63. மேலும், (முஃமின்களாகிய) அவர்கள் உள்ளங்களுக்கிடையில் (அன்பின்) பிணைப்பை உண்டாக்கினான்; பூமியிலுள்ள (செல்வங்கள்) அனைத்தையும் நீர் செலவு செய்த போதிலும், அவர்கள் உள்ளங்களுக்கிடையே அத்தகைய (அன்பின்) பிணைப்பை உண்டாக்கியிருக்க முடியாது - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் அவர்களிடையே அப்பிணைப்பை ஏற்படுத்தியுள்ளான்;
இனவெறி, குலவெறியற்ற இந்த சமுக சகோதரத்துவத்தை வார்த்தைகளால் அளந்து விடமுடியாது.
-      இப்ராஹிம் அல்நகஈ கூறுகையில் உனது சகோதரனை துண்டித்து நடவாதே ! பாவம் செய்யும்போது அவனை முற்று முழுதாக வெறுத்து ஒதுக்கி விடாதே ! இன்று பாவம் செய்பவன் நாளை பாவத்தை விட்டுவிடுவான்.
அடியார்களே ! அனாதைகளை அரவணைத்தல், வலுவற்றவர்களுக்கு இரக்கம் காட்டுதல், பசித்தவருக்கு உணவளித்தல், நோயாளிக்கு ஆறுதல் கூறுதல், பெரியவர்களை மதித்தல், இயலாதவர்கள் - முடியாதவர்களுக்கு உதவிசெய்தல், உதவிதேடுபவர்களுக்கு பதிலளித்தல், சிறமப்படுபவர்களுக்கு உதவி செய்தல் போன்ற நல்ல செயல்களை செய்யுங்கள்.
அருள்புரியப்பட்ட இந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்து கிடைக்கும் மகிழ்ச்சி முறையற்ற கருத்து முரண்பாடுகளால்  சிதைவடைவதை பார்க்கலாம். இவைகளுக்கான காரணம் சிந்தனை ரீதியான குழப்பங்களும், தனிநபர் கோட்பாடுகளின் பால் சகிப்புத்தன்மையற்ற அளவு கடந்த மோகத்தின் விளைவாகும்.
ஒரே சமுகம், ஒரே நபி, ஒரே கிப்லா, ஒரே வேதநூல் இவைகளையெல்லாம் உள்ளடக்கப்பட்டவர்கள் கருத்து வேற்றுமைகளின் போது அல்லாஹ்வின் வேதநூலான அல்குர்ஆனின் பக்கமும், தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களது வழிகாட்டலின் பக்கமும் மீள வேண்டும்.
o    ((இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகையில்:- நிச்சயமாக அல்குர்ஆன் இறக்கப்பட்டது அதனை ஓதி அது எதற்காக இறக்கப்பட்டது என்பதை அறிந்து கொண்டோம். நிச்சயமாக எதிர்காலத்தில் ஒரு கூட்டம் அல்குர்ஆனை ஓதுவார்கள். ஆனால் அது எதற்காக இறக்கப்பட்டது என்பதை அறியாமல் ஒவ்வொரு கூட்டமும் ஒவ்வொரு சிந்தனைக் கருத்துக்களுடன் இருப்பர். இவ்வாறு இருப்பின் அவர்கள் கருத்து வேற்றுமைப்படுவர்.))
o    8:46. நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.
o    8:1. அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் சொந்தமானதாகும்; ஆகவே அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; உங்களிடையே ஒழுங்குடன் நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் முஃமின்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்.
o    ((அரேபிய தீபகற்பத்தில் தொழுகையாளிகள் அல்லாஹ்வை வணங்குவதனால்  நிச்சயமாக ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான். ஆனால் அவர்களுக்கு மத்தியில் குழப்பங்களை விளைவிப்பான்.)) நபிமொழி
o    (( ஒருவரையொருவர் தங்களது பிடரிகளை வெட்டிக்கொள்ளுமளவுக்கு காபிர்களாக '' இறைநிராகரிப்பாளராக'' எனக்குப் பின்னர் மாறிவிடவேண்டாம்.)) நபிமொழி.

-------------------------------------

எமது பங்களிப்பு:- 

1-     கருத்து வேற்றுமைகளை களைந்து முஸ்லிம்களுக்கு மத்தியில் இஸ்லாமிய அடிப்படை உறவுகளை ஆழமாகப்பதித்து தேசிய ஒற்றுமையை உருவாக்க கூட்டாக செயல்படுவதாகும்.

2-     உலகம் விடிவைத்தேடி அங்காலாய்த்துக் கொண்டிருக்கும் இக்காலப் பொழுதில் உலகிற்கு அனுப்பப்பட்ட சிறந்த சமுதாயமான நாம் முறையாக அழகிய முன்மாதிரியை நடைமுறையில் எடுத்துக் காட்டி இஸ்லாமிய மார்க்கத்தை முறையாக எத்தி வைப்பது எமது கடமையாகும்.

3-     இழந்த இஸ்லாத்தின் மகிமையை மீட்க ஒவ்வொரு முஸ்லிமும் நடைமுறையில் உன்மை முஸ்லிமாக வாழவேண்டும்.

4-     மனிதர்களை இறைவிசுவாசத்தின் பால் அழைக்க சிறந்த அறிவுரை ஒரு முஃமின் தன்னில் சீர்திருத்தத்தை ஏற்படுத்துவதாகும்.

அல்அவ்ஸாஇய்யு அவர்கள் கூறுகையில் :- நிச்சயமாக ஒரு முஃமின் குறைவாகப் பேசி அதிகமான நன்மைகளைச் செய்வான். ஆனால் நயவஞ்சகன் முனாபிக் '' அதிகமாகக் பேசி குறைவான நன்மைகளைச் செய்வான்.
   ஹஸனுல் பஸரி  ரஹிமஹுல்லாஹ் கூறுகையில் :- மனிதர்களுக்கு உனது சொல்லால் அல்லாமல் செயலால் உபதேசிப்பாயாக !.
சமகாலத்தில் சில ஊர்களில் அல்லாஹ்வுடைய இல்லமான பள்ளிவாயில்கள் அதனுடைய புனிதத்துவம் மறக்கடிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளது. எனவே அதனுடைய உன்மையான உயிரோட்டத்தைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு நாம் அனைவரும் வேண்டப்பட்டுள்ளோம்.
o    24:36. இறை இல்லங்களில் அவனது பெயர் கூறப்படவேண்டுமென்றும் (அவற்றின் கண்ணியம்) உயர்த்தப்படவேண்டுமென்றும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். அவற்றில் காலையிலும் மாலையிலும் (முஃமின்கள்) அவனை துதி செய்து கொண்டிருப்பார்கள்.
o    ((உங்களில் ஒருவர் பள்ளிவாயிலுக்குச்சென்று ஒரு விடயத்தைப் படித்துக் கொள்வது அல்லது அல்குர்ஆனிலிருந்து இரண்டு வசனங்களை ஓதுவது இரண்டு ஒட்டகங்கள் கிடைப்பதைவிட சிறந்ததாகும். மூன்று வசனம் மூன்று ஒட்டகங்கள் கிடைப்பதைவிடவும் நான்கு வசனம் நான்கு ஒட்டகங்கள் கிடைப்பதைவிடவும் சிறந்ததாகும்,,,,,,. )) நபிமொழி  அறிவிப்பாளர் - உக்பத் இப்னு ஆமிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். நூல் முஸ்லிம்.

போதனைகளைக் கேட்டு நல்வழி நடந்தவர்களாக எம்மனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக. ஆமீன் !!!

0 comments:

Post a Comment

 
Top